மார்ச் 25-ல் சிவகார்த்திகேயனின் ’டான்’ தியேட்டரில் வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘டான்’ படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கரோனா பரவல், திரையரங்குளில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது பிப்ரவரி வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரோனா கட்டுப்பாடுகளால் ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கின. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் இப்படங்களை வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE