மீண்டும் தள்ளிப் போன 'கங்குபாய்’ ரிலீஸ் தேதி

By செய்திப்பிரிவு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பாலிவுட் படம் 'கங்குபாய் கத்யாவாடி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. ஆலியா பட், கங்குபாயாக நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உறுதியாக இருந்துவந்தார்.

கங்குபாய் கத்யாவாடி' படம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு மறுநாள் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் வெளியாகவிருந்தது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு 'கங்குபாய் கத்யாவாடி' படம் ஒரு மாதம் தள்ளி வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் கரோனா பரவல் அதிகரித்ததால் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவிருந்த 'கங்குபாய் கத்யாவாடி' படம் தற்போது அதிலிருந்து ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவதால் படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதியைப் படக்குழு தள்ளிவைத்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE