‘நாகினி’ மௌனி ராய்க்கு திருமணம் - தொழிலதிபரை கரம்பிடித்தார்

By செய்திப்பிரிவு

‘நாகினி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற்றது.

2007ஆம் ஆண்டு வெளியான ‘கியூன் கி சாஸ் பி பஹு தி’ என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் மௌனி ராய். அதில் அவர் நடித்திருந்த கிருஷ்ண துளசி என்ற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களிலும், தொடர்களிலும் நடித்தவர் 2015ஆம் ஆண்டு வெளியான ‘நாகினி’ தொடரின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியாருடன் மௌனி ராய்க்கு நேற்று (ஜன 27) திருமணம் நடைபெற்றது. கோவாவில் நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். திரையுலக பிரபலங்களான அர்ஜுன் பிஜ்லானி, மந்திரா பேடி, மன்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.

மணமகன் சுராஜ் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் கேரள முறைப்படி நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE