‘வாத்தி’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் திடீர் விலகல்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் விலகியுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் தற்போது திடீரென இப்படத்திலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டம். விரைவில் வேறொரு படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி விலகிய நிலையில் தற்போது ‘வாத்தி’ படத்திலிருந்தும் ஒளிப்பதிவாளர விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE