அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
“உனக்கொரு க்ரைம் கதை சொல்லட்டுமா” என்ற விஷாலின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது ட்ரெய்லர். இந்த ஒரு வசனத்திலிருந்து இது என்ன ஜானர் படம் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறார் இயக்குநர். ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே படத்தில் விஷால் ஒரு போலீஸ் அதிகாரி என்று காட்டப்படுகிறது. காமெடிக்கு யோகி பாபு, ரொமான்ஸுக்கு டிம்பிள் ஹயாதி என இருவருக்கும் ட்ரெய்லரில் சில நொடிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் இயக்குநர். தமிழ் சினிமா பார்த்து சலித்த ஒரு கார்ப்பரேட் வில்லன் போன்று ஒருவர் வருகிறார்.
நூல் பிடித்துக் குற்றவாளியைத் தேடும் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் களமாக இப்படம் இருக்கலாம் என்பது ட்ரெய்லர் மூலம் தெரியவருகிறது. “பாம்பைத் துரத்தும் எலி ஆபத்தானதா இல்லை எலியைத் துரத்தும் பாம்பு ஆபத்தானதா?” போன்ற வசனங்கள் ஹீரோ - வில்லன் இடையிலான கேட் அண்ட் மவுஸ் துரத்தல் காட்சிகள் படத்தில் உண்டு என்பதற்கான ஒரு சோறு பதம். வசனங்களும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
1.55வது நிமிடத்தில் வரும் காட்சி விஷால் ரசிகர்களுக்கான ட்ரீட். அனல் அரசுவின் ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது. யுவனின் இசை கலக்கல். கவின் ராஜின் ஒளிப்பதிவும் தரம். ட்ரெய்லரின் முடிவில் வரும் “நான் சாதாரண மனுஷன், சண்டை போடலன்னா நம்மளையும் கொன்னுடுவாங்க” என்ற வசனம், பின்னணி இசை, இடையிடையே வரும் சண்டைக்காட்சிகள் ஆகியற்றை ஒன்றாகச் சேர்த்து ட்ரெய்லரில் கொடுத்தது நல்ல ஐடியா.
இதற்கு முன் விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் வெளியான ‘பாண்டியநாடு’ மற்றும் ‘பாயும் புலி’ ஆகிய படங்கள் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க இயலவில்லை.
அதிரடியான ஆக்ஷன், டார்க் ஜானர், ஹீரோ - வில்லன் சேஸிங் படம் என ட்ரெய்லரில் இருக்கும் இந்த விறுவிறுப்பு அனுபவம் முழுப் படமாகப் பார்க்கும்போது கிடைக்கிறதா என்பதை வரும் 26ஆம் தேதி தெரிந்துகொள்வோம்.