மலையாள நடிகையைக் கரம் பிடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஹரிஷ் உத்தமன், மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

பிரபல வில்லன் - உறுதுணை நடிகர் ஹரிஷ் உத்தமன். தமிழ்ப் படங்களில் பிரதானமாக நடித்தாலும் இவரின் பூர்வீகம் கேரளா. திரைத்துறைக்கு வருவதற்கு முன் பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவரை 2010-ம் ஆண்டு வெளியான 'தா' என்ற படம் மூலமாக இயக்குநர் சூரிய பிரபாகரன் அறிமுகம் செய்துவைத்தார். இந்தப் படத்துக்காக நார்வே திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார் ஹரிஷ்.

தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் 'கௌரவம்' படத்தில் நடித்தவர், சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'பாண்டியநாடு' படம் மூலமாக பிரபலமானார். இதன்பின் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் - உறுதுணை நடிகராக, `தனி ஒருவன்', 'பாயும் புலி', 'றெக்க', 'தொடரி', 'பைரவா', 'டோரா' எனப் பல படங்களில் நடித்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ள ஹரிஷ் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே 2018-ம் ஆண்டு இவர் மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்துக்குள்ளாகவே இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஹரிஷ், மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இவர்களின் திருமணம் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை இருவரும் பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு திருமணச் சட்டம் என்பது மத நம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப் பதிவுக்கான பிரிவாகும். ஹரிஷ் உத்தமன் கரம் பிடித்துள்ள நடிகை சின்னு குருவிலா மலையாளப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான 'நார்த் 24 காதம்', மம்மூட்டியின் 'கஸபா' போன்ற ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE