‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் தனுஷ்?

By செய்திப்பிரிவு

‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கிய படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது தனுஷ், தமிழ்- தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கி வருகிறார். இப்படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE