'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு U/A சான்றிதழ்

By செய்திப்பிரிவு

சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாகப் படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ‘சும்மா சுர்ருன்னு’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களான ‘மாஸ்டர், ‘அண்ணாத்த’, ‘வலிமை’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்கள் அனைத்துக்கும் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE