‘புஷ்பா 2’ இன்னும் சிறப்பாக இருக்கும்: ராஷ்மிகா உறுதி

By செய்திப்பிரிவு

‘புஷ்பா 2’ படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கிய படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.219.68 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘புஷ்பா’ மீதான உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. இதுதான் எங்களை இன்னும் கடினமாக உழைக்கச் செய்யும். மேலும், நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம், ‘புஷ்பா 2’ இன்னும் சிறப்பாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும்''.

இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE