நடிகர் திலீப் வழக்கு: பாதிக்கப்பட்ட நடிகைக்கு மோகன்லால், ஜோயா அக்தர், பிருத்விராஜ் ஆதரவு

By செய்திப்பிரிவு

நடிகர் திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருப்பதாகத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். நடிகைக்கு ஏற்பட்ட இந்தக் கொடூரத்தின் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பது தெரியவந்தது. தன் மனைவியுடன் ஏற்பட்ட மோதலுக்கு நடிகை காரணமாக இருந்தார் எனக் கூறி அவரின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் மூலமாக திலீப் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றினார் எனக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை முதல் முறையாக பொதுவெளியில் நேற்று பேசினார். தனது சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட நடிகை வெளியிட்டுள்ள பதிவில், "இது எளிதான பயணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத் தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளது.

நான் குற்றம் செய்யவில்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, ​​நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது.

நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தை உறுதியுடனும் உயிர்ப்புடனும் தொடர்வேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாகத் தனது மனதில் இருந்த வேதனையை இந்தப் பதிவு மூலம் நடிகை வெளிப்படுத்திய பிறகு அவருக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்துள்ளன.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பார்வதி ஆகியோருடன், இந்தி சினிமாவைச் சேர்ந்த ஜோயா அக்தர் மற்றும் கொங்கோனா சென்ஷர்மா, தமிழ் சினிமாவின் பாடகி சின்மயி ஆகியோரும் நடிகைக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

மம்மூட்டி, நடிகையின் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துகொண்டு, 'உங்களுடன் இருக்கிறேன்' என்று பதிவிட்டார். இதேபோல் மோகன்லால் இந்தப் பதிவைப் பகிர்ந்து 'மரியாதை' (Respect) என்று பதிவிட்டுள்ளார். பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான ஜோயா அக்தரும், "உங்களுக்கு அதிக சக்தி கிடைக்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பாலிவுட் முன்னணி நடிகைகளான ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சதா போன்றோர்களும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE