மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரபல திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். தற்போது மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரின் உறவினர் பெண் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு உறவினர் பெண் அளித்த பேட்டியில் கூறுகையில், "தற்போது லதா மங்கேஷ்கர் நன்றாக இருக்கிறார். அவரின் வயதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மட்டுமே தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திதி(அக்கா)க்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
2019 நவம்பரில் மூச்சுத்திணறல் காரணமாக லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் காரணமாக மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
» 'என் பெற்றோருக்கே அனைத்துப் பெருமைகளும்' - கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு
» 'இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை': திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன், நடிகை குஷ்பு வரிசையில் லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.