சல்மான் கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கபீர் கான் உறுதி செய்துள்ளார்.
2015ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. கபீர் கான் இயக்கிய இப்படத்தில் கரீனா கபூர், நவாசுத்தீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்துக்கு எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியிருந்தார்.
சமீபத்தில் ராஜமௌலியின்‘ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சல்மான் கான் கூறியிருந்தார். ஆனால் அப்போது அதைப் பற்றிய வேறு எந்தத் தகவலையும் அவர் கூறவில்லை.
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் கபீர் கான் அளித்த பேட்டியில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார்.
அதில் இப்படத்துக்கு ‘பவன் புத்ரா பாய்ஜான்’ என்று தலைப்பிட முடிவு செய்துள்ளதாகவும் இப்படத்துக்கும் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதையெழுத உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல் பாகம் பெற்ற வெற்றியால் மட்டுமே இந்த படத்தை இயக்க தான் விரும்பவில்லை என்றும் ஒரு மிகச்சிறந்த கதையாக இருந்தால் மட்டுமே அதை இயக்கப் போவதாகவும் கபீர் கான் கூறியுள்ளார்.