நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
2022ஆம் ஆண்டு ஒரு பாசிட்டிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. ஆம் எனக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். கடும் உடல்வழி, மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல், லேசான் காய்ச்சல் ஆகியவை உள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு வர காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.