பொதுச் சேவைகளுக்காக அறியப்படும் பிரபல நடிகர் சோனு சூட், இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த அந்தஸ்தில் இருந்து விலகியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.
» சிட்னி பாய்ட்டியர் மறைவு - நிற பேதங்களைத் தகர்த்தவர்; ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர்
சோனு சூட்டின் இந்த சேவையை கௌரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் 'பஞ்சாப்பின் அடையாளம்' (Icon of Punjab) என்று அறிவித்தது. சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த மிகப்பெரிய கௌரவத்தை அளித்தது. தற்போது இந்த அடையாளத்தை சோனு சூட் துறந்துள்ளார். அதற்குக் காரணம் வரவிருக்கும் பஞ்சாப் தேர்தல். நடக்கவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சோனு சூட்டின் சகோதரி போட்டியிட இருப்பதை அடுத்து இந்த அந்தஸ்தில் இருந்து அவரே விலகியுள்ளார்.
இது தொடர்பாக சோனு சூட் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லா நல்ல விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டது. பஞ்சாப் மாநில ஐகான் பதவியில் இருந்து நானாக முன்வந்து விலகியுள்ளேன். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர் போட்டியிடுவதால் நானும் தேர்தல் ஆணையமும் பரஸ்பரம் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதமே தனது சகோதரி மால்விகா என்பவர் அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்று சோனு சூட் தெரிவித்திருந்தார். இப்போது அவர் தேர்தலில் போட்டியிட இருப்பதை அடுத்து இந்த முடிவை சோனு சூட் எடுத்துள்ளார்.