நடிகர் சத்யராஜ், இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் த்ரிஷா, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் எதையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
அதேபோல பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.