'மனிதனாயிரு' இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - கவிஞர் காமகோடியானுக்கு இளையராஜா புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான காமகோடியான் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்தவர் கவிஞர் காமகோடியான். எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, பரத்வாஜ் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 76 வயதாகும் காமகோடியான் நேற்று (ஜன 05) இரவு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காமகோடியான் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு 'வரப்பிரசாதம்' திரைப்படத்தில் வேலை செய்யும்போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.

அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய ‘மனிதனாயிரு’ என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணா பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" என்று இளையராஜா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE