நடிகை மீனா உட்பட அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு, இன்று (ஜன 06) முதல் இரவு ஊரடங்கு எனப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பதிவில், “2022ஆம் ஆண்டில் என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி, மிஸ்டர் கரோனா. என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதற்குப் பிடித்துவிட்டது. ஆனால், நான் அதைத் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டேன். கவனமாக இருக்கவும் மக்களே. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று மீனா தெரிவித்துள்ளார்.