பொங்கலுக்கு வெளியாகவிருந்த 'ராதே ஷ்யாம்' படம் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது.
தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ராதே ஷ்யாம்' படமும் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தை வெளியிட முடியாது எனவும், விரைவில் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.