‘வலிமை’யுடன் மோதுகிறதா விஷாலின்  'வீரமே வாகை சூடும்'?

By செய்திப்பிரிவு

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தைப் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர்

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து இப்படத்தை வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் மட்டுமே வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொருட்செலவில் உருவாகியிருந்தாலும் தமிழில் அப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படவில்லை.

இந்தச் சூழலில் 'வீரமே வாகை சூடும்' படத்தைப் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பொங்கலுக்கு 'வீரமே வாகை சூடும்' வெளியானால் ‘வலிமை’ படத்துடன் மோதும் ஒரே நேரடி தமிழ்ப் படமாக அப்படம் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE