‘ஆர்ஆர்ஆர்’ தள்ளிவைப்பு - விளம்பரங்களுக்காக செலவான ரூ.18 கோடி வீணானதா?

By செய்திப்பிரிவு

‘ஆர்ஆர்ஆர்’ விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே ரூ.18 முதல் 20 கோடிகள் வரை படக்குழு செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. 'பாகுபலி'க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஆர்ஆர்ஆர்' கவனம் ஈர்த்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால், அதிகரித்த வரும் கரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளியீட்டுக்கு முன்பான விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே ரூ.18 முதல் 20 கோடிகள் வரை படக்குழு செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை விமானத்தில் அழைத்துச் சென்றதற்கு மட்டும் ரூ.2 முதல் 3 கோடி வரை செலவானதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கரோனா பரவலால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என தற்போது முடிவு செய்ய இயலாத நிலை இருப்பதாலும் விளம்பரங்களுக்காக மட்டுமே செலவழிக்கப்பட்ட இவ்வளவு பெரிய தொகை வீணாகியுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE