வெங்கட் பிரபு இயக்கத்தில் கிச்சா சுதீப்

By செய்திப்பிரிவு

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இப்படத்தில் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 3டியில் வெளியாகிறது. இப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டில் சுதீப் உறுதி செய்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் என்னுடைய சொந்த மாநிலத்திலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தே எனக்கு வருகின்றன. பாலிவுட்டிலிருந்து வருபவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. அவை எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தாலே தவிர எனக்கு அவற்றின் மீது ஈர்ப்பு ஏற்படுவதில்ல. என்னுடைய அடுத்த படத்தை ‘மங்காத்தா’ மற்றும் ‘மாநாடு’ படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அவர் ஒரு புத்திசாலித்தனமான இயக்குநர். அவரோட பணிபுரிய நான் ஆவலாக இருக்கிறேன்" என்று சுதீப் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கிச்சா சுதீப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE