நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாகும் மோகன்

By செய்திப்பிரிவு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்.

80களின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் மோகன். மோகன் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதனாலேயே ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக மோகன் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்ததால் அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கிறார். ‘ஹரா’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இதை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் குறித்த விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE