‘புஷ்பா’ போன்ற ஒரு படத்தை நான் தயாரிக்க முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது என்று தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது.
இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (14.12.21) சென்னையில் நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
» 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10' ரிலீஸ் தேதி மாற்றம்
» சாதியக் குறியீடுகள் இருக்காது; டைட்டிலை மாற்றும் எண்ணம் இல்லை: ‘கள்ளன்’ இயக்குநர் விளக்கம்
இதில் தயாரிப்பாளர் தாணு பேசியதாவது:
'' ‘புஷ்பா’ போன்ற ஒரு படத்தை நான் தயாரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் தெலுங்கு ஹீரோ என்றாலும் தமிழ்ப் பையன், தமிழால் வளர்ந்த பையன். தேவிஶ்ரீபிரசாத் இசை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் தமிழில் இருக்கிறது. தமிழுக்கு வாருங்கள் என அவரை வரவேற்று வாழ்த்துகிறேன்''.
இவ்வாறு தாணு பேசினார்.