இளையராஜா என் கடவுள் என்றும் ரஜினி சார் தான் ஒரே தலைவர் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
சமீபத்தில் இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றிய பல்வேறு தகவல்களை தனுஷ் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
» தள்ளிப்போன ‘என்ன சொல்ல போகிறாய்' ரிலீஸ் - அஸ்வினின் பேச்சு காரணமா?
» கரீனா கபூர், அம்ரிதா அரோரா வீடுகளுக்கு சீல்: மும்பை மாநகராட்சி நடவடிக்கை
என் அப்பாவுக்காக சமைத்துக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. அது ஆம்லெட்டோ அல்லது சப்பாத்தியோ. சமையல் என்பது மிகவும் அழகான மற்றும் தெய்வீகமான ஒரு கலை என்பது என் எண்ணம். அது நமது ஆன்மா மற்றும் ரத்தத்தோடு கலந்து விடும். ஆனால் என் அப்பாவுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
சமையல் தவிர்த்து எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையாராஜாவின் இசை. இளையராஜா சார் என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே.
நான் இயக்குநராகவே விரும்புகிறேன். ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதன் இயக்குநருக்கே கிடைக்கும். எனவே நான் ஒரு இயக்குநராக விரும்புகிறேன்.
சாரா அலி கான் என்னை தலைவா என்று அழைக்கிறார். தலைவர் ஒருவர் மட்டுமே. அது ரஜினி சார் தான். அப்படி கூப்பிட வேண்டாம் என்றும் ரஜினி ரசிகர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாராவிடம் லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அதை கேட்பதில்லை.
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.