கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவரது வீடுகளுக்கும் மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது இல்லத்தில் ப்ரைவேட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டி நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு கடந்த ஞாயிறு அன்று கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருடனும் பார்ட்டியில் கலந்துகொண்ட 30க்கும் அதிகமான நபர்களைக் கண்டறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த கரண் ஜோஹருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருக்குமே லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களைத் தங்களது வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய மும்பை மாநகராட்சி அதிகாரிகள், பாந்த்ரா பகுதியில் உள்ள அவர்களது அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.