நடிகர் அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி 

நடிகர் அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி 'சர்வைவர்'. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி நேற்றுடன் (13.12.21) நிறைவடைந்தது. இதில் விஜயலட்சுமி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்துவிட வேண்டாம்''.

இவ்வாறு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE