ஜூனியர் என்டிஆர் கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறேன்: ராம் சரண்

By செய்திப்பிரிவு

தமிழ் என் இரண்டாவது தாய்மொழி என நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று ராஜமௌலி, ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் பல்வேறு தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இதில் நடிகர் ராம் சரண் பேசியதாவது:

''தமிழக ரசிகர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலியுடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகத் தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாகப் படைத்திருக்கிறார். அதைத் திரையிலும் சரியாகக் கொண்டுவர நாங்கள் உழைத்திருக்கிறோம்.

படத்தில் வேலை செய்தபோது சில காட்சிகளில் நடிக்கும்போது, ஜூனியர் என்.டி.ஆர் ஃப்ரீயாக இருப்பார். அதைப் பார்த்தபோது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில்தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி. இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடுவார்கள்''.

இவ்வாறு ராம் சரண் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE