‘நானே வருவேன்’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி விலகுவதாக அறிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா ஒப்பந்தமானார். ஆனால், அதன் பிறகு ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வந்தார்.
இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
» ‘மகேஷ் பாபுவுடன் பணியாற்றி வருகிறேன்’ - உறுதி செய்த ராஜமௌலி
» 'மாறன்’ பின்னணி இசைப் பணிகள் தொடக்கம்: ஜி.வி.பிரகாஷ் தகவல்
இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்திலிருந்து விலகுவதாக யாமினி யாக்னமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''இயக்குநர் செல்வராகவன் மற்றும் ‘நானே வருவேன்’ படக்குழுவுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி''.
இவ்வாறு யாமினி யாக்னமூர்த்தி தெரிவித்துள்ளார்.