‘நேரம்’, ‘பிரேமம்’ போல இருக்காது: ‘கோல்ட்’ படம் குறித்து அல்போன்ஸ் புத்திரன் பகிர்வு

By செய்திப்பிரிவு

‘கோல்ட்’ திரைப்படம் ‘நேரம்’, ‘பிரேமம்’ போல இருக்காது என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. அந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஃபகத் பாசில், நயன்தாரா நடிப்பில் 'பாட்டு' படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தொடங்கப்படாமலேயே இருந்தது. அதன் பிறகு 'பாட்டு' படத்தை ஒத்திவைத்துவிட்டு, ‘கோல்ட்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இதில் பிரித்விராஜ், நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர்.

பிரித்விராஜ் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘கோல்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ‘நேரம்’, ‘பிரேமம்’ போன்றது அல்ல. இது வேறு மாதிரியான திரைப்படம். சில நல்ல கதாபாத்திரங்கள், நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சில நகைச்சுவையுடன் எனது மூன்றாவது படம். வழக்கம் போல் ஒரு எச்சரிக்கை! போரையும் அன்பையும் எதிர்பார்த்து யாரும் இந்த வழியாக வரவேண்டாம்''.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE