மீண்டும் இணையும் அமீர் - யுவன் கூட்டணி

By செய்திப்பிரிவு

‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதி பகவன்’ என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். ‘யோகி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது ‘ராஜன்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது தான் நாயகனாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அமீர் வெளியிட்டுள்ளார். நேற்று (05.12.21) தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளிட்டுள்ள பத்திரிகை செய்தியில் இதனை உறுதி செய்துள்ளார்.

‘அதர்மம்’, ‘பகைவன்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா, அமீர், சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சினேகன் பாடல்களை எழுதுகிறார்.

அமீரின் முந்தைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன் மற்றும் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் போட்டோஷூட் நேற்று நடைபெற்றது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமீர், யுவன் ஷங்கர் ராஜா, ராம்ஜியும், சினேகன் இணைந்து பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE