இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன் - ‘மாநாடு’ வெற்றி குறித்து யுவன் அறிக்கை

By செய்திப்பிரிவு

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து யுவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் யுவன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எல்லாப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே !

இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும்.

வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பின்னணி இசையில் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

"நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் " என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE