‘சித்திரைச் செவ்வானம்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து சமுத்திரக்கனி பேசியுள்ளார்.
‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சித்திரைச் செவ்வானம்’. இயக்குநர் விஜய் தயாரித்துள்ள இப்படம் வரும் டிச.3 அன்று நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவ.30) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். இதில் சமுத்திரக்கனி பேசியவதாவது:
இந்த படத்தில் வேலை செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீ5 நல்ல கதைகள் மட்டும் தேடி தேடிச் செய்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. சில்வா என் தம்பி. நானும் அவனும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். அவனைப் பல வருடங்களாகத் தெரியும்.
» ஏ,பி,சி சென்டர்கள் என்று எதுவும் இல்லை; ‘மாநாடு’ வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் - சிம்பு
அப்பா படத்தின் போது அப்பாவைப் பற்றி பேசுங்கள் என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன். அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அவன் அப்பா தவறிவிட்ட ஏக்கத்தைப் பற்றி பேசியிருந்தான்.
இந்த படத்தில் அவன் என்னை அப்பாவாக பார்த்தான், நான் அவனை மகனாக பார்த்தேன். அவ்வளவு தான் எங்களுக்குள்ளான உறவு. இந்தப் படத்தின் கதை என்னை உலுக்கியது. இந்தப்படம் சமூகத்தை கேள்வி கேட்கும். பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்கு செல்வார். ரீமாவை இப்போது அவரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும், கண்ணிலேயே பேசுவார். இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் அருமையாக நடித்திருக்கிறார்கள். சில்வாவின் மகனும் இப்படத்தில் நடித்திருக்கிறார், அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.