‘மாநாடு’ வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்று சிம்பு பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்‘மாநாடு’ படம் குறித்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் நேற்று (நவ.30) நடந்தது, இதில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:
இப்படத்தின் வெற்றி ஏ,பி,சி சென்டர்கள் என்று இனி எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டுமே திருப்திபடுத்தும் என்று சொல்வதை நிறுத்த வேண்டிய தருணம் இது. இந்த வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல். இது மற்ற இயக்குநர்கள் நல்ல கதைகளைத் தேடிச் செல்ல ஊக்கம் தருவதாக இருக்கும்.
மழை, முதல் காட்சி ரத்து, என பல இடையூறுகள் வந்தாலும் என் ரசிகர்களிடமிருந்து நம்ப முடியாத ஆதரவு கிடைத்துள்ளது. படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து இன்னும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.