சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடைசிப் படம் அல்ல என்பதை சோனி தரப்பு உறுதி செய்துள்ளது.
2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரித்துள்ளன. கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்துள்ளனர்.
சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் இதுவே கடைசிப் படமாக இருக்கும் என்று பரவலாகக் கூறப்பட்டது. படத்தின் கதையும் அதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் இதுபற்றி இரு தரப்பும் மவுனம் காத்து வந்தன.
» யூடியூபில் சாதனை படைத்த ‘ஆர்ஆர்ஆர்’ பாடல்
» 'வரலாறு' அஜித் கதாபாத்திரப் பின்னணியில் சிவசங்கர் மாஸ்டர்: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு
இந்நிலையில் சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடைசிப் படம் அல்ல என்பதை சோனி தரப்பு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து சோனி நிறுவனத்தின் நிர்வாகி ஏமி பாஸ்கல் தனியார் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இது மார்வெல் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் கடைசிப் படம் அல்ல. இன்னும் மூன்று படங்களைத் தயாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சில் இது கடைசி ஸபைடர்மேன் படமாக இருக்காது. அந்த மூன்று படங்களிலும் டாம் ஹாலண்ட்தான் ஸ்பைடர்மேன்''.
இவ்வாறு ஏமி பாஸ்கல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த மூன்று ஸ்பைடர்மேன் படங்களையும் சோனி - மார்வெல் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.