சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. ‘மாநாடு’ படம் வெளியான மறுநாள் படத்தைப் பார்த்த பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பெரும் தொகை கொடுத்து படத்தின் ரீமேக் உரிமையைப் பெற முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் இருவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு சார்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.