வெளியானது 'மாநாடு' - மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதிக்கு (இன்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 'மாநாடு' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஓர் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்பட்டது.

தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு நேற்று இரவு அறிவித்தது.

அந்த வகையில் படம் இன்று (நவ.25) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE