பயோபிக் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

By செய்திப்பிரிவு

மறைந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ரசிகர் ஒருவரின் கோரிக்கைக்கு இயக்குநர் சந்தோஷ் ஆனந்த்ராம் பதிலளித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் ‘யுவரத்னா’. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மறைந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர் சந்தோஷ் ஆனந்த்ராமின் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் சந்தோஷ் ஆனந்த்ராம், “இந்த யோசனையைத் திரையில் கொண்டுவர என்னாலான முயற்சிகளைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE