டிஸ்னி, மார்வெல் குடும்பத்தில் தொடர்ந்து பணியாற்ற ஆவல்: ஸ்கார்லெட் ஜோஹன்சன் பேட்டி

By செய்திப்பிரிவு

தொடர்ந்து டிஸ்னி, மார்வெல் குடும்பத்தில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக ஸ்கார்லெட் ஜோஹன்சன் பேட்டியளித்துள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்டப் படங்களில் ஒன்றான ‘ப்ளாக் விடோ’ கடந்த ஜூலை மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட சில நாடுகளிலும் டிஸ்னி + ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான்.

இதனைத் தொடர்ந்து படத்தின் நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்சன் டிஸ்னி நிறுவனம் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ‘ப்ளாக் விடோ’ படத்துக்காக டிஸ்னி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் படம் பிரத்யேகமான திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டதாகவும், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பொறுத்தே தன்னுடைய சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தனக்கு ரூ.370 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு உரிய தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்கார்லெட் ஜோஹன்சன் பேசியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

''அந்த விவகாரம் எனக்கு நிச்சயமற்ற, அழுத்தமான காலகட்டமாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று எண்ணினேன். இந்த விவகாரத்தின் மூலம் திரைத்துறையில் ஒரு நேர்மறைத் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் மார்வெல், டிஸ்னி நிறுவனங்களில் பணிபுரிந்ததுதான் மகிழ்ச்சியான தருணங்களான இருந்தன. தொடர்ந்து டிஸ்னி, மார்வெல் குடும்பத்தில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்''.

இவ்வாறு ஸ்கார்லெட் ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE