‘ஜெய் பீம்’ படம் குறித்த சூரியின் பதிவுக்கு நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
படத்தையும் படக்குழுவையும் பாராட்டியவர்களுக்கு சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ‘ஜெய் பீம்’ படம் வெளியானபோது அதைப் பார்த்த நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்னு நெனச்சுதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியல, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன். 'ஜெய் பீம்' படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்குப் பெருமை” என்று பதிவிட்டிருந்தார்.
சூரியின் இந்தப் பதிவுக்கு நேற்று (நவ.17) பதிலளித்துள்ள சூர்யா, ''இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு'' என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.