‘மாநாடு’ யுவனுக்கு மிகப்பெரிய கம்பேக்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 

‘மாநாடு’ படம் யுவனுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (நவ.18) 'மாநாடு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:

''ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து இந்தப் படத்தை நாம் எடுப்போம் என்று சொன்னபோது இவ்வளவு பெரிய படத்தை என்னால் சுமக்க முடியுமா என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இது உங்களால் முடியும் என்று சிம்பு என்னை ஊக்கப்படுத்தினார். ஆனால், எனக்கு பயமாகவே இருந்தது. ஆனாலும் சிம்பு என் மீது வைத்த நம்பிக்கைக்காக நான் இதில் இறங்கினேன்.

இளையராஜாவுக்கு எப்படி 'காதலுக்கு மரியாதை' ஒரு கம்பேக்காக இருந்ததோ அதே போல இந்தப் படம் யுவனுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும். சிம்பு படம் என்றாலே யுவன் மிகவும் ரசித்து இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு மற்ற இரு ஹீரோக்கள் என்றால் அது யுவனும், எடிட்டர் ப்ரவீனும்தான். சிம்பு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாரா என்று நிறைய பேர் என்னிடம் போன் செய்து கேட்பார்கள். அப்படி எனக்கு அவரால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றிவிட்டேன் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE