‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘டாக்டர்’ கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிதாக ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இயக்குநர் முடிவானதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இது தவிர தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஜதிரத்னலு’ இயக்குநர் அனுதீப் கே.வி.இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ்- தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ளது.