மம்மூட்டி - லிஜோ ஜோஸ் இணையும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’

By செய்திப்பிரிவு

லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்துக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இவர் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி, பின்னர் வெளியேறியது.

கடந்த ஆண்டு வெறும் 19 நாட்களில் ‘சுருளி’ என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் வரும் நவ.19ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை லிஜோ ஜோஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் தமிழ் - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மம்மூட்டி தயாரிக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE