'எதற்கும் துணிந்தவன்' படக்குழுவுக்குத் தங்கக் காசுகள்: சூர்யா பரிசு

By செய்திப்பிரிவு

'எதற்கும் துணிந்தவன்' படக்குழுவினருக்கு சூர்யா தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் சூர்யா தன்னுடன் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் படக்குழுவுக்குத் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு சூர்யா தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.

டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளை முடித்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அல்லது வரும் பொங்கல் பண்டிகைக்குப் படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE