'கங்குபாய்’ வெளியீடு தள்ளிவைப்பு: படக்குழுவுக்கு ராஜமௌலி நன்றி

'கங்குபாய் காட்யவாடி' வெளியீட்டைத் தள்ளிவைத்த படக்குழுவுக்கு இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பாலிவுட் படம் 'கங்குபாய் காட்யவாடி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. ஆலியா பட், கங்குபாயாக நடித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உறுதியாக இருந்துவந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் 'கங்குபாய் காட்யவாடி' படம் திரையரங்குகளில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு மறுநாளான ஜனவரி 7ஆம் தேதியன்று ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது 'கங்குபாய் காட்யவாடி' படம் ஒரு மாதம் தள்ளி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினரின் இந்த அறிவிப்புக்கு இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜெயந்திலால் கடாண்ட் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் பட வெளியீட்டைத் தள்ளிவைக்கும் முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. 'கங்குபாய் காட்யவாடி' படக்குழுவுக்கு வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE