திரையரங்குகளில் வெளியாகிறது  கடைசி விவசாயி

By செய்திப்பிரிவு

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி' படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கடைசி விவசாயி' படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்தப் படத்தின் விநியோக உரிமைக்காக, நீண்ட மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. பின்னர் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 'கடைசி விவசாயி' படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை படக்குழு நேற்று பிரிண்ட் செக் செய்து முடித்துள்ளது. எனவே திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE