'அண்ணாத்த' படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. தமிழகத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாது, காலை 4 மணிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'அண்ணாத்த' பார்த்துவிட்டு, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 'அண்ணாத்த' படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் பேசியிருப்பதாவது:
"ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருக்கும் போது தமிழகம் மிரண்டு போய்விட்டது. அவருடைய மிகப்பெரிய காதலன் நான். மக்களின் சுவைக்காக, சிரிப்புக்காக, வீரத்துக்காக 45 ஆண்டுகள் திரையுலக வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். இயற்கை எப்போதும் அவரை காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் 50 ஆண்டுகள் அவர் இருக்க வேண்டும். அந்த மகா கலைஞனை நன்றி கடனுடன் பார்க்க வேண்டும்.
'அண்ணாத்த' பெரிய ஹிட்டாக வேண்டும். அந்தப் படத்தை குடும்பம் குடும்பாகப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுக்க 'அண்ணாத்த' படம் பற்றிப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு படம் ஓடினால், அனைத்து படங்களும் ஓடும். 'அண்ணாத்த' படம் 500 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்"
இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.