‘செங்கேணி’ கதாபாத்திரத்திலிருந்து தன்னால் வெளியே வரமுடியவில்லை என்று நடிகை லிஜோமோல் ஜோஸ் தெரிவித்துள்ளார்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இப்படத்தில் ‘செங்கேணி’ என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஜோமோல் ஜோஸ். இவரது நடிப்பைப் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ‘செங்கேணி’ கதாபாத்திரத்திலிருந்து தன்னால் வெளியே வரமுடியவில்லை என்று லிஜோமோல் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''படத்தை இப்போது பார்த்தாலும் அழுகை வந்துவிடும். காரணம் செங்கேணியின் துயரத்தை நான் அனுபவித்தேன். இன்னும் அது எனக்குள்ளேயே இருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் அளவுக்கு நான் நடித்த எதுவும் என்னை இந்த அளவுக்கு பாதிக்கவில்லை. டப்பிங்கின் போதும், மரணக் காட்சிகளிலும் கிளிசரின் போடவேண்டிய தேவை ஏற்படவில்லை. திரையில் நீங்கள் பார்க்கும் கண்ணீர் அனைத்தும் உண்மையானவை. இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை''.
இவ்வாறு லிஜோமோல் ஜோஸ் தெரிவித்துள்ளார்.