பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.01) ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆறு மாதகாலமாக பாலகிருஷ்ணாவுக்குத் தோள்பட்டையில் வலி இருந்ததாகவும், நேற்று முன்தினம் அந்த வலி கடுமையானதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
பாலகிருஷ்ணா விரைவில் குண்டமடைய அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.