'டாக்டர்' படத்தின் திரையரங்க மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
'டாக்டர்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்து வருகிறது. தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் 'ரெமோ'தான் அதிக வசூல் செய்துள்ளது. அந்தப் படத்தின் வசூலை 'டாக்டர்' கடந்துவிட்டது.
தற்போது 'டாக்டர்' படத்தின் திரையரங்க மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாக, கே.ஜே.ஆர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
» 'ஜெய் பீம்’ பார்த்தேன்; கண்கள் குளமானது: கமல் பாராட்டு
» அப்பா மிக விரைவாக குணமடைந்து வருகிறார்: ஐஸ்வர்யா தனுஷ் பகிர்வு
இது தொடர்பாக கே.ஜே.ஆர் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த வேற மாறி பிளாக்பஸ்டர் படத்தின் 25 நாட்களும் உங்களைச் சிரிக்க, கைதட்ட, உற்சாகப்படுத்த வைத்துள்ளது. 'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி".
இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தீபாவளி (நவம்பர் 4) அன்று சன் டிவியில் 'டாக்டர்' ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கு அடுத்த நாள் (நவம்பர் 5) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரள மாநிலங்களிலும் 'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.