'நாயட்டு' தெலுங்கு ரீமேக் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாயட்டு' படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாயட்டு'. ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இணைந்து தயாரித்த இந்தப் படம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது. காவல் துறைக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதர மொழிகளின் ரீமேக் உரிமை விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. நீண்ட நாட்களாக முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ராவ் ரமேஷ், அஞ்சலி, பிரியதர்ஷி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தை 'பலசா 1978', 'ஸ்ரீதேவி சோடா சென்டர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கருணா குமார் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

'நாயட்டு' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார். தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE